பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முத்தி தரக்கூடிய ஆன்மீக நகரமான திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு 2 தினங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளான சனிக்கிழமை உலக நன்மைக்காக தமிழகத்தில் உள்ள சிவாலயங்களைச்சேர்ந்த 1008 சிவாச்சாரியார்கள் பங்கேற்ற 1008 சிவ பூஜைகளை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
சைவத்தின் தலைவனாக விளங்கக் கூடிய அண்ணாமலையாரை நோக்கி சிவ மந்திரங்களை ஓதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்க வைக்கப்பட்ட அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் ஆன்மீக பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4 மணி அளவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செந்தில்குமார், திருவண்ணாமலை அண்ணா நுழைவாயிலிருந்து பிரமாண்டமான ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த பிரமாண்டமான ஊர்வலத்தில் 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், பஞ்சமூர்த்திகள், 108 நாதஸ்வரம், 108 உடல் வாத்தியங்கள் உள்ளிட்ட 30 வகையான வாத்தியங்களுடன் பேரணி நடைபெற்றது.
சிவன் பார்வதி, காளி உள்ளிட்ட அம்மன் வேடம் அணிந்தும், தெருக்கூத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், பாரம்பரிய தப்பாட்டம், பொம்மலாட்டம், பம்பை உடுக்கை, கேரளா செண்டை மேளங்கள் முழங்க கதகளி ஆடியபடியும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பேரணியாக சென்றனர்.
திருவண்ணாமலை பேருந்து நிலையம், ரவுண்டானா, பெரியார் சிலை, காந்தி சிலை வழியாக சென்ற பேரணியை ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டு அருள் ஆசி வழங்கினார்.
பின்னர் தொடங்கிய பேரணி மாட வீதி, செங்கம் சாலை சந்திப்பு, ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ஶ்ரீ ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை சந்தைமேடு மைதானம் சென்றடைந்தது.
இதனைத்தொடர்ந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள், ஶ்ரீ வில்லிபுத்தூர் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடம் ஶ்ரீ செந்தில்குமார், கலவை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமி ஆகியோர் அருள் ஆசி வழங்கினர்.
இந்த ஊர்வலத்தில் மாநாடு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அண்ணாமலையார் கோயில் இளவரசு பட்டம் மிராசு அர்ச்சகம் பி.டி.ரமேஷ் குருக்கள், தொழிலதிபர் ஜெகதீஷ் கடவுள், வக்கீல் வெங்கட்ராமன், பி.டி.ஆர்.கோகுல் குருக்கள், தொழிலதிபர் ஆர்.ஆர். பிரகாஷ், பி.டி.கண்ணன் குருக்கள், பி.டி.எஸ்.ராஜேஷ் குருக்கள், டாக்டர் பி.டி. ஆர்.சோனாத்திரி, பி.டி. கே.அர்விந்த் குருக்கள், பி.டி.கே.அஜய் குருக்கள், மாமன்ற உறுப்பினர்கள் மெட்ராஸ் கே.சுப்பிரமணி, ஶ்ரீ தேவி பழனி, பிரகாஷ், சிவில் சீனுவாசன், பிரகாஷ், காந்தி, இ.டி.விஜய், சுரேஷ் திருநாவுக்கரசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





