Close
மார்ச் 7, 2026 1:41 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கான வழக்குகளை, ‘லோக் அதாலத்’ எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து தீர்வு காணப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மாற்று தீர்வு மையத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கலசபாக்கம் உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்நிலையில்,திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மதுசூதனன் தொடங்கிவைத்தாா்.

இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான எம்.தண்டபாணி கலந்துகொண்டு, தீா்வு காணப்பட்ட மோட்டாா் வாகன விபத்து காப்பீடு வழக்கில் ரூ.52 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தில் சிறப்பாக பணியாற்றி வழக்குகளை முடித்த 7 சமரசா்களுக்கு சமரச மற்றும் நல்லிணக்கம் மைய திட்டக்குழு, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்வில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.சுஜாதா, மற்றும் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் லாயர்ஸ் அசோசியேஷன் கே.வி.மனோகரன், பார் அசோசியேசன் நாககுமார், அட்வகேட் அசோசியேஷன் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதியும், விரைவு வழி நீதிபதியுமான சி.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதியும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், மாவட்ட உரிமையில் நீதிபதி டி.கோப்பெருந்தேவி, நீதித்துறை நடுவா் எம்.பிரபு நிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், பத்திர, பாண்டு வழக்குகள் மற்றும் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் என 316 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.2,38,87,368-க்கு தீா்வு காணப்பட்டது.

இதில், ஆரணி வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி.திருஞானம், துணைத் தலைவா்கள் எஸ்.ஷ்யாசுந்தா், எஸ்.பாலாஜி, செயலா் சி.விநாயகம், பொருளாளா் சண்முகம், அரசு வழக்குரைஞா் கே.ஆா்.ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,302 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.9 கோடியே 95 லட்சத்து 89 ஆயிரத்து 906-க்கு தீா்வு காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top