மதுரை மாவட்டம், பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது .
இதனால், பாலமேட்டில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய பொதுமக்கள் ஆங்காங்கே டீக்கடை ஓரங்களிலும் பெட்டிக்கடை பகுதிகளிலும் அமர்ந்து பேருந்தில் ஏறிச் சென்ற அவல நிலை ஏற்பட்டது
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பேருந்து நிலையம் முழுவதையும் ஆக்கிரமித்து விழா மேடை அமைத்ததால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தின் வெளியே பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விட்டது. ஆகையால், கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் ஆட்டோக்களிலும் நடைபயணமாகவும் சென்ற அவல நிலை ஏற்பட்டது .
இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இனிவரும் காலங்களில் ஆவது பொதுமக்களை சிரமப்படுத்தாமல் நிகழ்ச்சிகளை நடத்த அதிகாரிகள் திமுகவினருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என கூறினர்.

