Close
மார்ச் 7, 2026 4:18 மணி

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ‘அக்னி’ ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் தொடங்கி 10 நாள் அனுதினமும் காலை மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெறும்.

அதில் 7-ம் நாளில் ‘மகா தேரோட்டத்தில் பஞ்சமூர்த்திகள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி மகா தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

ஒரே நாளில் 5 மகாதேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு மகாதேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு நடைப்பெற்றும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும்.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை 4.30 பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள வரும் 24ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். தொடர்ந்து, அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.

பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top