Close
மார்ச் 7, 2026 1:41 மணி

அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தமிழ் மாதங்களில் சூரியன் வடக்கு திசை நோக்கி நகரும் காலமான தை மாதம் வரும் அமாவாசை, சூரியன் தென்திசை நோக்கி நகரும் காலமான ஆடி மாதம் வரும் அமாவாசை மூதாதையர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.

இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் சூரியன் கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த அமாவாசையை மகாளய அமாவாசை என்பார்கள்.

இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம், தென்பெண்ணை ஆறு, செய்யாற்று, கலசப்பாக்கம் நந்தன் ஏரி உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மஹாளய அமாவாசையை யொட்டி  திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலையிலேயே அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மஹாளய அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், நேற்று இரவு அமாவாசை மண்டத்தில் அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி காட்சியளித்தார்.

நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

குறிப்பாக, திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் செல்லும் பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதனால், சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டது.

ஆனாலும், ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top