சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே அம்மன் தேர், முருகர் தேர், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர் நகர்த்தி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையார் தேர் நகர்த்தி நிறுத்தப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதால் 16 கால் மண்டபம் எதிரே நிற்கவைக்கப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் அமர்ந்து செல்லக்கூடிய தேர்களை 200 மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகர்த்தி நிறுத்தும் பணி நடைபெற்றது.
அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் 7-வது நாள் திருவிழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மரத்தேரில் எழுந்தருள பக்தர்கள் கோவிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வடம் பிடித்து இழுத்து வழிபடுவார்கள்.
ஒரே நாளில் 5 மகாதேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும். ஒவ்வொரு மகாதேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு நடைபெறும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலின் நான்கு மாட வீதியை சுற்றி கான்கிரீட் சாலை அமைக்க அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 2-வது கட்டமாக காந்தி சிலையிலிருந்து திருவூடல் தெரு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் விநாயகர், முருகர், பராசக்தி அம்மன் ஆகிய 3 தேர்களும் அதன் நிலையிலிருந்து சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 200 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி நிறுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அண்ணாமலையார் தேர் நகர காவல் நிலையம் அருகில் பக்தர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகர்த்தி நிறுத்தும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து கான்கிரீட் சாலை அமைத்த உடன் தேர்கள் அனைத்தும் பழைய இடங்களிலேயே நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கோவில் தக்கார் டாக்டர் மீனாட்சிசுந்தரம், இணை ஆணையர் பரணிதரன், திருக்கோயில் பிச்சகர்கள் ரகுராமன் மற்றும் விஜயகுமார், சிவாச்சாரியார்கள் முன்னாள் அறங்காவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.




