Close
மார்ச் 7, 2026 1:56 மணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா: ஒருமுக ருத்ராட்சம் அணிந்து காட்சி கொடுத்த பிரதோஷ நாயகர்

பிரதோஷ நாயகருக்கு அணிவிக்கப்படும் ஒருமுக ருத்ராட்சம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  ஐப்பசி மாத சனி  பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும்  என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை  பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று  வருகின்றன.

சிவபெருமானையும், சிவனின் வாகனமான நந்தி தேவரையும் பிரதோஷ நாளில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்றத் தரும். தொடர்ந்து பிரதோஷ விரதம்  இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு–இறப்பு இல்லாத முக்தி நிலையை அவர் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான  வழிபாடாகி கருதப்படுகிறது. பிரதோஷங்களில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என சொல்வதுண்டு. இந்த நாளில் சிவனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும்.

அருணாசலேஸ்வரா் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம்  எதிரே உள்ள பெரிய நந்தி, கோவில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு  நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஒருமுக ருத்ராட்சம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தன்று மட்டும் பிரதோஷ நாயகருக்கு அணிவிக்கப்படும் ஒருமுக ருத்ராட்சம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு  அணிவிக்கப்பட்டது. அதனை கண்ட பக்தர்கள் பரவசமடைந்து வணங்கினர்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ  காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

ஐப்பசி மாத  பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயில்

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில், மூலவா்  மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கொடி மரம் அருகேயுள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக,  அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், கோயில் உள்புற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சிவனை ரிஷப வாகனத்தில் அமா்த்தி உலா நடைபெற்றது.

இதில் சேத்துப்பட்டு, அருணகிரிநாதா், பெரணமல்லூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, கீழ்பெண்ணாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், செங்கம் ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் , செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா், கோயில்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top