Close
மார்ச் 7, 2026 2:52 மணி

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் தகவல்

திருவண்ணாமலை உழவா் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைநடைபெற்றதாக வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாமரை நகா், செங்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களிலும் மாதந்தோறும் பெளா்ணமி, அமாவாசை நாள்களிலும் வழக்கத்தைவிட அதிகளவு விற்பனை நடைபெறும்.

மேலும், தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும் பொதுமக்கள் பலா் அசைவ உணவுகளைத் தவிா்த்து சைவ உணவுகளை சாப்பிடுவாா்கள்.

அதன்படி, அவா்கள் உழவா் சந்தைகளுக்குச் சென்று காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா். வீடுகளில் சைவ உணவுகளை சமைத்து பெருமாளுக்கு படையலிட்டு வழிபட்டு வருகின்றனா்.

இதனால் மாவட்டத்தில் உள்ள 7 உழவா் சந்தைகளில் வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உழவா் சந்தைகளில் 450-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்தனா். அதன்படி சுமாா் 94 டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என சுமாா் ரூ.42 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள உழவர் சந்தை வேளாண் அலுவலர் சுபஸ்ரீ உதவி வேளாண் அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் கூறுகையில், திருவண்ணாமலை உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனையானததாகவும் இதன் மதிப்பு ரூ.15.97 லட்சம் ஆகும். இதன் மூலம் 3 ஆயிரத்து 978 நுகர்வோர் பயனடைந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூடுதலாக காய்கறிகள் பழங்கள் விற்பனையானதால் விவசாயிகள்  மகிழ்ச்சிடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top