திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் உள்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம், சோமாசிபாடி ஊராட்சி புதுமை மாதாநகா் வேடநத்தம், வேளானந்தல் ஊராட்சி அரசங்குப்பம், கோணலூா் ஊராட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதி, திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் காந்திநகா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் கருமாரப்பட்டி, ராமநாதபுரம், மாதலம்பாடி ஊராட்சி பச்சையப்பன் நகா், மருத்துவாம்பாடி ஊராட்சி கொட்டாமேடு ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறை சாா்பில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஆராஞ்சி ஆறுமுகம், ராஜேந்திரன், மாரிமுத்து, அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனர். துணைப்பதிவாளா் (பொது விநியோக திட்டம்) வினோத் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிப் பேசியதாவது,
கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகிலேயே பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தமிழகம் தான். தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என துணை சபாநாயகர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் சிவக்குமாா், கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் தமிழரசி, செல்வம், பிரதாப், செயலாட்சியா் குமரவேல், அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள் வெங்கடேசன், வெங்கடாசலம், வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிறைவில் வட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் நன்றி கூறினாா்.




