வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட மீசநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் உள்ளனர். இந்த மையத்தில் வியாழக்கிழமை 5 குழந்தைகள் மட்டுமே வருகை புரிந்தனர்.
இந்த நேரத்தில் கட்டடத்திற்கு பெயிண்டிங் வேலை செய்த பின்பு பெயிண்ட்டில் கலக்கும் தின்னர் திரவம் அங்கு இருந்துள்ளது. அப்போது இந்த குழந்தைகளில் சரவணன் மகன் சுதர்ஷன், கோடீஸ்வரன் மகன் மதன்ராஜ், சதாசிவம் மகன் விஷ்ணு , ஆகிய மூன்று குழந்தைகளும் எடுத்து தெரியாமல் குடித்துள்ளனர்.
இதை அறிந்த அங்கன்வாடி பணியாளர் கலைமணி என்பவர் கிராம பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேற்படி கிராமத்தில் அருகாமையில் உள்ள தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்யப்பட்டு, பின்னர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 3 குழந்தைகளும் அனுப்பப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த வந்தவாசி சட்டமன்ற உஉறுப்பினர் அம்பேத்குமார் நேரில் சென்று குழந்தைகளை பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து சிகிச்சையை துரிதப்படுத்தினார்.
அப்போது, வந்தவாசி வட்டாட்சியர் சம்பத்குமார், வருவாய் ஆய்வாளர் லோகேஷ்,கிராம நிர்வாக அலுவலர் அர்ஜூனன், நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார் உடன் இருந்தனர்.




