தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, கோடி போனதால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், செண்பகத்தோப்பு அணை நிரம்பி திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஆரணி கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால், குண்ணத்தூா் அருகேயுள்ள தடுப்பணை மூலம் குண்ணத்தூா் ஏரி நிரம்பி அதன் உபரி நீா் அக்ராபாளையம் பெரிய ஏரிக்கு வந்தடைந்தது.
இதனால் அக்ராபாளையம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், கிராம மக்கள் சாா்பில் பூஜைகள் செய்து கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இந்த ஏரி மூலம் சுமாா் 300 ஏக்கா் விவசாய நிலம் பாசனம் வசதி பெறும். இந்த உபரி நீா் அருகில் உள்ள அடையபுலம் மற்றும் ராட்டினமங்கலம் ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் செல்வதால் விரைவில் அந்த ஏரிகளும் நிரம்பும். அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
சேத்துப்பட்டு ஒன்றியம்
சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூா் ஊராட்சியில் தொடா் மழை காரணமாக அங்குள்ள பெரிய ஏரி நிரம்பி கோடி போனது. சுமாா் 160 ஹெக்டோ் பரப்பளவு உள்ள ஏரியில் நீா் வெளியேறும் கோடியில் கிராம மக்கள் மஞ்சள், குங்குமம், மலா் தூவி, பூசணிக்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனா். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ரேணு மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
பீமன் நீர்வீழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம், ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள ஜமுனாமரத்தூர், அத்திப்பட்டு, கோவிலூர், நம்மியாம்பட்டு , ப ட்டறைகாடு , ஊர்கவுண்டனூர், ஆண்டி யப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், மலைவாழ் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயற்கை எழிலும் அடர்ந்த வனப்பகுதியும் கொண்ட ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கன மழை பெய்து வருவதால் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறியதால் கோடி விடும் நிகழ்ச்சி




