தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், அணைகள் நிரம்பி உள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் நேற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால், நேற்று படிப்படியாக 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்நிலையில், திருவண்ணாமலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் கள ஆய்வு நடத்தினர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதி
அண்ணாமலையார் மலையில் கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான வ.உ.சி நகர் 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவின் போது அண்ணாமலையார் மலையின் மீது இருந்து 40 டன் எடையுள்ள மிகப்பெரிய பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இந்த மண் சரிவில் கணவன், மனைவி அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் மண் சரிவில் புதைந்து பலியானார்கள்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் குழுவினருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது பெய்த கனமழையால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்றும், மேலும் அந்த இடங்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதா என்றும் , அப்பகுதியின் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் குழுவினருடன் மலையில் மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது என நேரில் கேட்டறிந்தார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கனமழை ஏற்பட்டால் பொதுமக்களை எவ்வாறு அந்தப் பகுதியிலிருந்து அகற்றுவது என்றும் எங்கு தங்க வைப்பது என்றும் அதிகாரிகள் குழுவினருடன் நேரில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் உள்பட பல்வேறு துறை அலுவலர் உடன் இருந்தனர்.




