Close
மார்ச் 7, 2026 1:27 மணி

அண்ணாமலையார் கோவிலில் உழவாரப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வெளிநாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக உள்ளது. நினைத்தாலே முக்தியை தரக் கூடிய முக்தித் தலம் என்பதாலும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதாக கருதப்படுவதால் மலையை வலம் வந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதாலும் தினமும் வெளி மாநிலம் வெளிநாட்டைச் சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-வது நாளான டிசம்பர் மாதம் 3ம்  தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு சென்னையை சேர்ந்த நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் 150-க்கும் மேற்பட்டோர் கோவிலில் உள்ள உள் மற்றும் வெளி பிரகாரங்களில் உள்ள தூண்கள், சிற்பங்கள், உட்பிரகாரங்கள், இரும்பு கதவுகள் மற்றும் நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.

உழவார பணி குழுவினருடன் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணியில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட கோவிலுக்கு வந்திருந்த ஆன்மிக பக்தர்கள் வெளிநாட்டினரின் செயலை பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top