பஞ்சபூத ஸ்தலமாகவும்,நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 7 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேபோல் விடுமுறை தினம் சனி, ஞாயிறு தொடர் விடுமுறையொட்டி அதிகளவில் பக்தர்கள் வந்தனர்.
குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ரூ. 50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.
மேலும் பக்தர்களின் வரிசையானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நீண்டு காணப்பட்டது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 7 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர்.
அதேசமயம் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் பக்தர்களின் வரிசையும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்பட்ட வட ஒத்தவாடை தெருவில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் அதிகளவில் சென்று வந்ததாலும் மக்கள் அவதி அடைந்தனர்.
பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.. கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னப்பர் தெரு
சின்ன கடை தெரு வழியாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் அண்ணா சிலை அருகில் உள்ள சென்னப்பர் தெரு, குயமட தெரு வழியாக சென்றதால் அந்தக் குறுகலான தெருக்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்ணா சிலையிலிருந்து சென்னப்பர் தெரு செல்லும் சாலையில் ஆட்டோக்கள் வராதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
வாகனம் நிறுத்த இடம் தேவை
பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசல் நகரின் பல பகுதிகளில் காணப்பட்டது. மாட வீதி, சின்னக்கடை தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கார், வேன்கள் அனுமதிக்கப்படவில்லை.
பெரும்பாலான குறுக்கு சாலைகளில், வாகனங்கள் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் இடமில்லாததால் பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் மதில் சுவர் மாட வீதிகளில் உள்ள சாலை ஓரங்களிலும் வாகனத்தை நிறுத்தி சென்று விடுகின்றனர்.
பலர் தங்களது வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல் இடம் தேடி மாடவீதி ஒட்டி உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அங்கு குடியிருப்பவர்கள் வெளியில் வர முடியாமலும் தங்களது வாகனங்களை எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சீரமைப்பது போலீசாருக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,
சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகிறோம். வாகனங்களை நிறுத்த பார்க்கிங் மையம் இல்லாததால் இடம் தேடி அலைந்து சாலையோர பகுதிகளில் காரை நிறுத்தி சாமி தரிசனம் செய்கிறோம்.
இதனால் அங்கு இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது என்றால் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் தேடுவதற்கு அதை விட நேரம் கூடுதலாக ஆகிறது.
எனவே அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனத்தை நிறுத்த பார்க்கிங் ஸ்பாட் அமைத்து கொடுத்தல் மற்றும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு என உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் பக்தர்களுக்கு விரைவு தரிசனம் மற்றும் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.





