தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசியில் உள்ள அருள்மிகு உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
இன்று திருவிழாவின் ஒன்பதாவது நாளான சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேள தாளங்கள் முழங்க, சிவகோஷங்களோடு உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் 15ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது.
சுவாமி அம்பாள் தேர் கடந்த பல வருடமாக பழுதாகி இருக்கும் நிலையில் காசி விஸ்வநாதர் தேரில் அம்பாள் திரு தேரோட்டம் நடைபெற்ற நிலையில் தேரை விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




