Close
மார்ச் 7, 2026 2:51 மணி

புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம்! விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 7-ம் நாள் விழாவன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும்.

அன்றைய தினம் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி தனித்தனியாக மாட வீதியில் வலம் வருவார்கள். இதில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.

இந்த நிலையில் சுமார் 45.11 அடி உயரமுள்ள பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.71 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணி தொடங்கி கடந்த சில தினங்களாக தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அது மட்டுமல்லாமல் பெண்கள் மட்டுமே இழுத்து வரக்கூடிய 45 அடி உயரம் கொண்டபராசக்தி அம்மன் தேரின் மேல் 5 நிலைகளும் புதுப்பிக்கும் பணியும், தேரின் உச்சியில் அமைந்துள்ள மேல் கூண்டு, வேங்கை மரத்தினாலான 53 தூண்கள் புதிய மரங்களைக்கொண்டு அமைக்கப்பட்டு வண்ண வண்ண நிறங்களால் வர்ணம் பூசம் பணி உள்ளிட்ட மராமத்து பணிகளும் முழுமூச்சில் மும்மரமாக புதுப்பொலிவுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் அம்மன் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அம்மன் தேருக்கு கீர்த்தி வாசன், கோகுல் சேஷாத்திரி மற்றும் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் சக்தி கோஷத்துடன் வெள்ளோட்டமானது துவங்கியது.

வழக்கமாக அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். அதேபோல் வெள்ளோட்டத்தின்போதும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் அசைந்து ஆடியபடி மாடவீதியில் வலம் வந்தது.

மேலும் தேர் வெள்ளோட்டத்தையொட்டி மாட வீதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. தோ் வெள்ளோட்டத்தையொட்டி, காவல் துறையினரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் இந்து சமய நிலையத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top