Close
மார்ச் 7, 2026 1:24 மணி

திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும்.

அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால், நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், தீபத் திருவிழாவை காண வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல் துறையினரை பணியில் அமர்த்த வேண்டும்.  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும், வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும், கிரிவலப் பாதையில் போலி சாமியாா்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கக் கூடாது, கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி. பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலாஜி, திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோர் நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top