திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் 29ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 30ம் தேதியும் நடக்கிறது.
விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், எம்பி சி.என்.அண்ணாதுரையும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினர்.
ரயில் கால அட்டவணை விபரம் பின்வருமாறு:
- நெல்லை – திருவண்ணாமலை சிறப்பு ரயில்:
டிசம்பர் 3-ம் தேதி இரவு 9.30 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்படும். மறுநாள் (டிசம்பர் 4) காலை 8.30 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும். டிசம்பர் 4-ம் தேதி இரவு 7.55 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
- சென்னை சென்ட்ரல் – திருவண்ணாமலை:
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். காலை 9.15 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாகத் திருவண்ணாமலை செல்லும். பின்னர் அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு வழியாகச் சுற்றி வந்து அன்று இரவு 7 மணிக்குச் சென்னை கடற்கரை (Chennai Beach) நிலையத்தை வந்தடையும்.
- தாம்பரம் – திருவண்ணாமலை (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
டிசம்பர் 3 மற்றும் 4 காலை 9.15 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே நாளில் மாலை 5 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
- விழுப்புரம் – திருவண்ணாமலை (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
நவம்பர் 30, டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். அதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
- விழுப்புரம் – வேலூர் கண்டோன்மெண்ட் (முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டிலிருந்து புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் இந்தச்சிறப்பு ரயில்கள் பயண நேர விபரம் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது.
பேருந்துகள்
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நெல்லை, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட தொலைத்தூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் APP மூலமாக டிக்கெட்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




