திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.
வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற டிசம்பர் 04ம் தேதியன்று காலை 07.55 மணிக்கு துவங்கி மறுநாள் 05ம் தேதி அதிகாலை 3.55 ணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்புகள்
சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமிகளில் கிரிவலம் செல்வது கூடுதல் பலன் தரக் கூடியதாகும். ஐப்பசி பெளர்ணமி எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
கார்த்திகை பெளர்ணமியில் தான் ஜோதி வடிவமாக சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சி அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல் கிரிவல வழிபாடு தோன்றியது, பார்வதிக்கு தனது உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக ஈசன் காட்சி அளித்து ஆகியவையும் இதே கார்த்திகை பெளர்ணமியில் தான் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக கார்த்திகை மாத பெளர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை தான் கார்த்திகை தீபத் திருநாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் வரும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 03ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் பெளர்ணமி திதி டிசம்பர் 04ம்தேதி தான் துவங்குகிறது. டிசம்பர் 04ம் தேதி மாலை 03.08 வரை கிருத்திகை நட்சத்திரம் இருப்பதால் அன்றைய தினம் காலையிலேயே கிரிவலத்தை துவங்குவது சிறப்பானதாகும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை கிரிவலம் செல்வதுதான் ஞானம் பெருகும் குரு அருள் கிடைக்கும்.
பல ஜென்ம பாவங்களையும் போக்கிடும். அது மட்டுமல்ல இறந்த முன்னோர்களுக்கான இறுதிச் சடங்குகளை சரியாக செய்யாதவர்கள், அவர்களுக்கான பித்ரு தர்ப்பண காரியங்களை முறையாக செய்யாதவர்கள் ஆகியோர் இந்த வியாழக்கிழமையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் அந்த பாவங்களும் நீங்கிடும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
கார்த்திகை பெளர்ணமி இந்த ஆண்டு, திருக்கார்த்திகைக்கு அடுத்த நாள் வருகிறது. அப்போது மலை உச்சியில் எரியும் மகாதீபத்தை தரிசித்த படியே கிரிவலம் வருவது பல கோடி புண்ணியங்களை பெற்றுத் தரும்.
இந்த அற்புத நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு. அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
இந்த பௌர்ணமி நாளில் வழிபடுவதால் மனிதர்களின் மனங்களில் மட்டும் இன்றி வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.




