திருவண்ணாமலை செங்கம் சாலையில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் காஞ்சிபுரத்தில் 1870-ல் பிறந்தார். பிறகு தை மாதம் 1889 முதல் திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பல அற்புதங்களை திருவண்ணாமலையில் நடத்திக் காட்டினார். மார்கழி மாதம் 1929- ல் ஜீவசமாதி அடைந்தார்.
திருவண்ணாமலையில் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.
குடிநீர் தேக்கத் தொட்டி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் டிசம்பர் 3 ம் தேதி காலை 8 மணி முதல் பௌர்ணமி தினமான இன்று 4ம் தேதி இரவு வரை தொடர் சிறப்பு அன்னதான நிகழ்வு நடைபெற்று வருகிறது.
மேலும் திருவண்ணாமலை மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் முயற்சியால் கிரிவலப் பாதை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தால் கிரிவலம் வரும் பக்தர்களின் தாகத்தை போக்க குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஞானபிரகாசம் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் திறந்து வைத்து கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள்.
மாத நாட்காட்டி
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான மாத நாட்காட்டி வெளியிடப்பட்டது. இந்த நாட்காட்டி செல்வம், ஆன்மீகம்,லெளகீகம் என்று பக்தர்களுக்கு, மகான் எல்லா நிலைகளிலும் அருள்பாலிக்கும் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்காட்டியின் சிறப்புகள் குறித்து கிரிவலம் வந்த பக்தர்கள் கூறுகையில், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தால் வெளியிடப்படும் இந்த நாட்காட்டியில் சுவாமிகளின் திருவுருவப்படம் தான் அதி முக்கியம்.
தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு வரும்போது கண்டிப்பாக இதனை வாங்கி சென்றிடுவோம். ஜனவரி 1ம் தேதி புது வருட பிறப்பன்று இந்த நாட்காட்டியை வைத்து பூஜையறையில் வழிபடுவோம் என பரவசத்துடன் தெரிவித்தனர்.





