அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார்.
திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.
அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ மற்றும் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு வரவேற்றார். நிகழ்ச்சியில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதலில் உங்களைப் பற்றி சொல்கிறேன். மாஸாக கெத்தாக இங்கு வந்திருக்கும் திரவிடியன் ஸ்டாக்ஸ் எல்லோருக்கும் என்னுடைய முதல் வணக்கம். எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று, எனக்கு இருக்கிறது.
உங்களைப் போன்ற இளைஞனாக கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரசாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது ரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது- புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது. அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது.
உறுப்பினர் சேர்க்கைக்கு பல கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் வாக்குச்சாவடி அளவில் இளைஞரணியினரை நியமித்து, 91 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளைக் கொண்டு மண்டல மாநாடு நடத்தியது திமுகதான்.
இன்றைக்கு மாநாடு என்றால் லட்சக்கணக்கில் அல்ல, நூற்றுக்கணக்கில்கூட இளைஞர்களைத் திரட்டுவது சாதாரண விஷயம் அல்ல. திமுகவில்தான் இளைஞரணி நிர்வாகிகளை ஒரு மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இது நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக்கணக்கை சுக்கு நூறாக உடைக்கின்ற கொள்கைக் கூட்டம்.
பொதுவாக இளைஞர்கள் கூட்டம் என்றால் கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்பாடு இருக்காது என்ற ஒரு பிம்பம் தற்போது வந்துள்ளது. ஆனால் திமுக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு உடையவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சான்றாகும்.
கட்டுப்பாடு இல்லாமல் ஒரு லட்சமல்ல, ஒருகோடி இளைஞர்கள் திரண்டாலும் யாருக்கும் எந்தப் பலனும் கிடையாது.
கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து யாராலும் எதையும் சாதிக்க முடியாது. ஆனால், கட்டுப்பாடு இங்குள்ள கூட்டம் திமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பலமாக இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியும்.
திமுகவினர், இளைஞரணியினர் களத்திலிருந்து என்றும் பின்வாங்கியது கிடையாது. ஆதிக்கத்துக்கு அடிபணிந்தது கிடையாது. சுயமரியாதையை விட்டுக் கொடுத்தது கிடையாது.
அப்படிப்பட்ட திமுகவை சிலர் இன்று மிரட்டிப் பார்க்கிறார்கள். பிகார் வெற்றி விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, பிகாரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம், அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று பேசியிருக்கிறார். நீங்கள் எவ்வளவு சீண்டினாலும், மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு கருப்புசிவப்பு இளைஞரணிப் படை களத்தில் என்றும் தயாராக இருக்கும்.
மாண்புமிகு அமித்ஷா அவர்களே, நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. இது தமிழ்நாடு. எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே, அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம்.
உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும். அதற்கு ரியாக்ட் செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும். மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இங்கே உதயநிதி சொன்னதுபோல, நீங்கள் ஒவ்வொருவரும் மினிமம் பத்து இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசியல் உணர்வை, நம்முடைய கொள்கைகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள். கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள்.
நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும். இருப்பீர்களா? இப்போது சொல்லுங்கள். நமது மிஷன் 2026 என்ன? “திராவிட மாடல் 2.0” சத்தமாகச் சொல்லுங்கள். திராவிட மாடல் 2.0 அந்த வெற்றிக்கான பயணத்தை, இன்றைக்கே தொடங்குங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.




