Close
மார்ச் 7, 2026 4:57 மணி

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து”: திருப்பாவை மூன்றாம் பாசுரம், ஆண்டாளின் கவித்திறன்

திருப்பாவை மூன்றாம் பாசுரம், திருப்பாவையின் முத்திரைப் பாடல் என்றே கூறலாம். ஓங்கி உலகளந்த எனத் துவங்கும் இப்பாடலின் ஒரு தொடரின் அழகு, சுவை, சிறப்பு பற்றியதே  இந்த பதிவு.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடித்
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

என்பதே அந்தத் தொடர்.

இத்தொடரில் உள்ள அனைத்து சொற்களும் மிக மிக சிறப்பானவை. ஆனால் தீங்கின்றி என்ற சொற்றொடர் அற்புதமான ஒன்றாகும். தீங்கின்றி என்ற சொல்லுக்குப் பதிலாக  நன்மையுடன் எனப் போட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறதா?

இவ்விரு சொற்களும் ஒன்று போலிருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல. நன்மையுடன்  என்ற சொல் நன்மை மட்டுமே என்று பொருள் தராது. ஆனால் தீங்கின்றி என்ற சொல் தீங்கேயில்லை நன்மை மட்டுமே என்ற பொருளைத் தரும். பேச்சு வழக்கில் “நேற்றிரவு நல்ல/ சரியான/ செம மழை” போன்ற நேர்மறை சொற்களுடன் கூடிய சொல்லடைவுகள் நேர்மறை பொருளைத் தருவதில்லை.   இரட்டை எதிர்மறை சொற்கள் ஒற்றை நேர்மறை சொல்லைவிட வலிமையானது.

Double negative phrases are used by scholars to add emphasis. பல இடங்களில் அறிஞர்கள் ஒற்றை நேர்மறை சொல்லுக்குப் பதில் இரட்டை எதிர்மறை சொற்கள் பயன்படுத்துவர்.

திருவிளையாடல் திரைப்படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடும் அற்புதப் பாடல் இல்லாததொன்றில்லை எனத் தொடங்கும். நீயல்லால் தெய்வமில்லை என்ற பாடலைப் பலரும்  சீர்காழியின் கணீர் குரலில் கேட்டிருக்கலாம்.

Shakespeare used double negatives extensively for emphasis, making a statement stronger- “I never was, nor never will be” – Hamlet. It is not uncommon to use double negative words.

திருவண்ணாமலை நகரத்தில் மழை பெய்யும் ஆனால் பக்கத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் மழைக்கான அறிகுறியே தெரியாது.

இத்தகைய மழையால் பெரிய நன்மையில்லை. எனவேதான் ஆண்டாள் நாடெல்லாம் என்ற சொல்லைக் கையாளுகிறாள். அனைவருக்குமான நன்மையே தீங்கில்லா நன்மை.

அடுத்தது திங்கள் மும்மாரி. திங்கள் மும்மாரி என்பது சுபிட்சத்தின்/ செழுமையின் அடையாளம். எனவேதான், நாட்டின் வளம் பற்றியறிய, மன்னர் அமைச்சரிடம் “மாதம் மும்மாரி பொழிகிறதா” எனக் கேட்டறிவார் என்பது  மரபு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவில், 80 விழுக்காட்டிற்கு மேல், இரண்டே மாதங்களில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. இத்தகைய மழை எவ்வாறு தீங்கற்ற மழையாய் இருக்கும். நினைத்துப் பாருங்கள். இன்று மிதமான மழை. அடுத்து 9 நாட்களுக்கு மழையில்லை. பிறகு பதினொன்றாம் நாள் மீண்டும் மிதமான மழை. இப்படியான இடைவெளியில் தீங்கில்லா மழை பெய்தால் விவசாயம் எப்படி பயன் பெறும், நாடு எங்ஙனம் வளம் பெறும் என விவரிக்கத் தேவையில்லை.

ஆயினும், திங்கள் மும்மாரி என்ற சொற்றொடருக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று முறை என்ற பொருள் மட்டுமே இல்லை. விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் வருகிறது:

“ வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கு  ஓர் மழை

மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே”

எனவே திங்கள் மும்மாரி என்ற சொற்றொடர், நாட்டின் செழுமையை, ஆட்சியரதும், குடிமக்களுடையதுமான நல்லொழுக்கத்தின் வெளிப்பாடு என்றும் கொள்ளலாம்.

இறுதியாகத் தீங்கற்ற மழை பெய்யுமே தவிர பொழியாது. எனவேதான் ஆண்டாள் பெய்து என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள். இவ்வாறாக, ஒரு பாடலின் ஒரு வரியில் உள்ள சொற்களே இவ்வளவு அழகாகவும், சுவையுடனும் மிளிர்கிறது என்றால், ஆண்டாளின் கவித்திறனை என்னென்பது.

இப்பதிவின் முத்தாய்ப்பாக ஒரு செய்தி. தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து என்கின்ற தொடர் ஒரு உரிசொற்றொடராகும். அதாவது மழை பெய்தலின் பண்பை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. In English language/ grammar, usage, especially the Order  of multiple adjectives/ adverbs in a sentence is generally disciplined by  OSASCOMP Rule.

இப்பதிவின் நீளம் கருதி நான் இந்த OSASCOMP Rule பற்றி விளக்க விழையவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் தேடித் தெரிந்து கொள்ளவும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆண்டாள், இந்த விதியை அற்புதமாகக் கையாண்டிருப்பது, ஆண்டாளின் கவித்திறனை மற்றுமின்றி,  மொழி இலக்கணத்தின் முன்னோடி தமிழ் என்பதைப் பறைசாற்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top