Close
மார்ச் 7, 2026 1:26 மணி

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல் திருவிழா உள்பட பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இதில் உத்தராயண புண்ணிய கால பூஜை முன்னிட்டு 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.

தை மாதம் தேவர்களின் பகல் காலம் என்று அறியப்படும் உத்தராயண புண்ணிய கால தொடங்க இருக்கிறது, இந்த உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவது மற்றும் சூரியன் தெற்கு திசையில் இருந்து வடதிசை நோக்கி செல்வது ஆகிய இரண்டுமே உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது, சாஸ்திரங்களின்படி உத்திராயன புண்ணிய காலம் என்பது தேவர்களுடைய பகல் காலம் தை மாதம் ஒன்றாம் தேதி துவங்கும் உத்தராயண புண்ணிய காலம் ஆனி மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் இந்த திருவிழா மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் நடைபெறும்.

அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவும் கொடி ஏற்றத்துடன் துவங்கும்.

அதன்படி உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

தொடா்ந்து, அதிகாலை 5.42 மணியளவில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றினா்.

அப்போது, கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.

இதைத்தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவின் நிறைவு நாளான வரும் 15ம்தேதி (தை முதல் நாள்) தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

இதைதொடர்ந்து 16ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிகவும் பிரசித்திபெற்ற திருவூடல் உற்சவமும், 17ம் தேதி மறுவூடல் உற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top