மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டு பெருமாள் நகர் பைபாஸ் ரோடு அருகில் குடியிருந்து வருபவர் ஜோசப் இக்னோசிஸ் (வயது 51). இவரது மனைவி மெர்சி (45) இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் கலைந்து சிதறி கிடந்தது பீரோ கதவு திறந்த நிலையில் அதிலிருந்த தோடு, மோதிரம் உள்ளிட்ட 5 1/2 தங்க நகைகளையும், ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரமாகும். மேலும் விசாரணையில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில் அது பதிவு செய்யும் பெட்டியையும் திருடர்கள் விட்டு வைக்கவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆசிரியர் ஜோசப் இக்னோசிஸ் கொடுத்த புகாரின் பேரில், வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திவ்யா வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.



