தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் -மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள், தங்களின் இரண்டு மாத கால ‘கிராமப்புற அனுபவத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பயிற்சியின் போது மாணவிகளான ஐஸ்வர்யா, புவனா, தீபிகா, டான்யா, டெபிஷா, தேவஸ்ரீ, தர்ஷினி மற்றும் திவ்ய தர்ஷினி ஆகியோர் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்தனர். அங்கு சாகுபடி முறைகள் மற்றும் அறிவியல் சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்து, விவசாயிகளுக்குப் பருவ காலத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும், கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாணவிகள் தேனி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், அவர்களை நேரில் சந்தித்துத் தங்களது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, மாணவிகள் எதிர்காலச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் (Futuristic Ideas) மற்றும் அதற்குத் தேவையான தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் (Skill Development) என்று மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக, இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் தங்களது எதிர்காலப் பாதையைத் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பிக்கையூட்டினார். மேலும், மேல் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு எப்போதும் தன்னை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியரின் இந்த வழிகாட்டுதல், தங்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையை அளித்ததாக மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி. வளர்மதி அவர்களும் உடனிருந்தார்.




