Close
மார்ச் 7, 2026 2:53 மணி

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

தை இரண்டாம்  வெள்ளியை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

விளக்கு பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இறைவனை விளக்கில் எழுந்தருளச் செய்து, ஜோதி வடிவமாக இறைவனை வழிபட்டு, அருளை பெறும் வழிபாட்டு முறையாகும்

இந்த விளக்கு பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலோ செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நாளில் செய்யப்படும் போது அதன் பலன்களும் அளவில்லாமல் கிடைக்கும். விளக்கு ஏற்றி வழிபடும் போதும் அதற்குரிய மந்திரங்களை சொல்லி அம்பிகையை வழிபடும் போது அம்பிகையின் முழு அருளையும் பெற முடியும்.

“புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க வல்லது திருவிளக்கு வழிபாடு” , அதனால் தான் தினதோறும் வீடுகளில் காலை மாலை இரு வேளையும் தீபமேற்றி வழிபடுவது நம் சம்பிரதாயம்.

தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருக்கோயில்களில் 1008 ,108 என்ற எண்ணிக்கையில் திருவிளக்கு பூஜைகள் செய்து கூட்டு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

“விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும்” என்று திருமந்திரம் போற்றுகிறது. ஆலயங்களில் பலர் கூடி செய்யும் திருவிளக்கு வழிபாடு மந்திர பூர்வமாக செய்யும் வேள்விக்கு சமம்.

தீபத்தில் எழுந்தருளுகின்ற சுடரை தீப லட்சுமி என்றே வழிபடுவது நமது வழக்கம்.

அதன்படி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தை வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், மானசாதேவி, துர்க்கை அம்மன், உமாதேவி சன்னதிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், அபிஷேக திரவியங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சன்னதிக்கு எதிரே உள்ள மகா மண்டபத்தில் 108 சுமங்கலிகள்  கலந்துகொண்டு திருவிளக்கு  பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சுமங்கலி வழிபாடு நிகழ்ந்தேறியது.

பின்னர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 108 பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசிரமம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

ஜெயந்தி விழா

வருகின்ற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மகான் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் மகான் சேஷாத்திரி சுவாமிகளின் 156 வது ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top