நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
மலை மீது செல்வதற்கு தடை
வனவிலங்கு பாதுகாப்பு காரணங்களாலும், அண்ணாமலையார் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மலைக்கு நேரடியாக ஏறுவதற்கு வனத்துறை கடும் தடை விதித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்தத் தடை, பக்தர்களின் பாதுகாப்பையும், மலையின் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தீபத் திருவிழாவின் போதும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தீபம் நிறைவடைந்த பின்னர் அனுமதியின்றி மலைமீது சென்ற பெரம்பலூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும், மலைமீது தடையை மீறி செல்பவர்களை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, அண்ணாமலையார் தீபமலை மீது தடையை மீறி ஏறிச்சென்று அங்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.
நடிகையின் இந்த செயல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனா ரவிச்சந்திரன், மலை உச்சியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது அனுபவத்தையும் விரிவாக பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் தனது பதிவில், “மலை ஏற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள். எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே இறங்குவதை திட்டமிடுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
பொதுமக்களை மலை ஏறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவும் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருவதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மலை மீது சின்னத்திரை நடிகை அர்ச்சனா மட்டும் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.




