Close
மார்ச் 7, 2026 1:47 மணி

வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: கொமதேக ஈஸ்வரன் அறிக்கை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. கட்டுக்கடங்காமல் ஏறிக் கொண்டிருக்கின்ற தங்கம், வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை இல்லை என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன் கூறியுள்ளார்

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பண வீக்கத்தை குறைக்கின்ற அறிவிப்புகள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மக்களுடைய வருமானத்தை அதிகப்படுத்துகின்ற முயற்சியோ அல்லது விலைவாசியை குறைக்கின்ற முயற்சியோ எடுக்கப்படவில்லை.

வரி வருவாயில் மாநிலத்தினுடைய பங்கு உயர்த்தப்படவில்லை. மாநிலத்தினுடைய பங்கை உயர்த்தி கடனில் தத்தளிக்கின்ற மாநிலங்களுக்கு கை கொடுத்திருக்கலாம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடக்கூடிய திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

வெளிநாட்டு பணத்திற்கு எதிராக வீழ்ந்து கொண்டிருக்கின்ற இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த நடவடிக்கை இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றியோ, கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியோ எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமளவு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், குறிப்பிடும் படியான அறிவிப்புகள் இல்லை. ஏழை மக்கள் யோசித்துப் பார்க்க முடியாத அளவிற்கு விலையேறிக் கொண்டிருக்கின்ற தங்கம், வெள்ளி விலையை கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

மொத்தத்தில் அத்தியாவசிய பொருட்களுடைய விலை உயர வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top