Close
மார்ச் 7, 2026 2:05 மணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற  மாசி   மாத  சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சிவ பெருமானையும், சிவனின் வாகனமான நந்தி தேவரையும் பிரதோஷ நாளில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்றத் தரும். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை அவர் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாகி கருதப்படுகிறது. பிரதோஷங்களில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என சொல்வதுண்டு. இந்த நாளில் சிவனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோவில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி, மகா பிரதோஷ வழிப்பாட்டு மன்றம் சாா்பில் கோயில் முன் உள்ள நந்தீஸ்வரருக்கு மாலை 4 மணி முதல் பாலபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரதோஷ வழிபாட்டில், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் பழைமையான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி என பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.  இதில் சேத்துப்பட்டு, பெரணமல்லூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top