வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது
திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிதமான மழை பரவலாகப் பெய்தது. கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் நிலத்தடி நீர் உயரும் என நம்பும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரணி, வந்தவாசி, போளூர், தண்டராம்பட்டு மற்றும் ஜவ்வாது மலை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
இந்த திடீர் கனமழை கடும் கோடை வெயிலின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டில் பகுதியில் மின்னலும் இடியும் தாக்கின அதனைத் தொடா்ந்து நள்ளிரவு அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால், சேத்துப்பட்டு காவலா் குடியிருப்பு அருகேயுள்ள பழைமை வாய்ந்த மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் வந்து மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதால், அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்திருக்கிறது. அதன்படி, தற்போது அணையில் 53 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் ஆண்டு சராசரியைவிட குறைவாக பெய்தது. ஆனாலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 119 அடி முழுமையாக நிரம்பியது.
எனவே, அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அணையின் வலதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 220 கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 330 கன அடியும் என மொத்தம் 550 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் பயன்பெறுவதற்காக, தென்பெண்ணை வழியாக தற்போது வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த 50 நாட்களாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி மொத்தமுள்ள 119 அடியில் 100.85 அடியாக குறைந்திருக்கிறது. அணையின் நீர்கொள்ளளவு மொத்தமுள்ள 7321 மிகன அடியில், தற்போது 3881 மி.கன அடியாக உள்ளது.
இது, அணையின் மொத்த நீர்கொள்ளளவில் 53 சதவீத நீர் இருப்பாகும். சாத்தனூர் அணையில் இருந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 11ம் தேதி வரை தொடர்ச்சியாக விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் பின் சம்பா பருவ நெல் சாகுபடி தடையின்றி நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




