Close
மார்ச் 7, 2026 1:26 மணி

விண்வெளியில் அலைந்து திரியும் ‘முரட்டு கிரகம்’

வானியலில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் விண்வெளியில் தனியாக மிதந்து கொண்டிருக்கும் எக்ஸோப்ளானெட்’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம், சனிக்கோளின் அளவை ஒத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு கிரகம் என்றால் அது ஒரு நட்சத்திரத்தை, உதாரணத்திற்கு பூமி சூரியனை சுற்றுவது போல, சுற்றி வரும். ஆனால், சில கிரகங்கள் எந்த நட்சத்திரத்தின் பிடியிலும் இல்லாமல் விண்வெளியின் இருட்டில் தனியாக அலைந்து கொண்டிருக்கும். இவை ‘முரட்டு கிரகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. 2000-ம் ஆண்டில் இவற்றைப் பற்றிய முதல் தடயங்கள் கிடைத்தாலும், தற்போதுதான் முதல்முறையாக ஒரு கிரகத்தின் தூரம் மற்றும் எடையை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணக்கிட முடிந்துள்ளது.

இந்த விசித்திர உலகைக் கண்டறிய பூமியில் உள்ள ஆய்வகங்களுடன் சேர்த்து, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ‘கையா’ விண்வெளி தொலைநோக்கியும் பயன்படுத்தப்பட்டது. இந்த கிரகம் பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதியை நோக்கி, பூமியிலிருந்து சுமார் 9,950 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது.

இது பூமியை விட சுமார் 70 மடங்கு பெரிய நிறை கொண்டது. ஒப்பீட்டளவில் சனிக்கோள் பூமியை விட 95 மடங்கு பெரியது. நட்சத்திரம் இல்லாமல் இவை உருவானது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் மூன்று காரணங்களைக் கூறுகின்றனர்:

  • ஒரு நட்சத்திர மண்டலம் உருவாகும் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் மோதல்களால் சில கிரகங்கள் வெளியே தள்ளப்படலாம்.
  • அருகில் கடந்து செல்லும் மற்ற நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையினால் ஒரு கிரகம் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வெற்றிடத்திற்குள் வீசப்படலாம்.
  • நட்சத்திரங்கள் உருவாகும் அதே வாயு மற்றும் தூசி மேகங்களிலிருந்து சில கிரகங்கள் நேரடியாகவே தனியாக உருவாகலாம்.

இந்த கிரகங்கள் சுய ஒளியை வெளியிடாததால், சாதாரண தொலைநோக்கிகள் மூலம் இவற்றைக் காண்பது கடினம். எனவே ‘ஈர்ப்பு நுண்லென்சிங்’ என்ற முறையை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ஒரு தூரத்து நட்சத்திரத்திற்கு முன்னால் இந்த முரட்டு கிரகம் கடந்து செல்லும்போது, அதன் ஈர்ப்பு விசை ஒரு பூதக்கண்ணாடியைப் போலச் செயல்பட்டு அந்த நட்சத்திரத்தின் ஒளியைச் சற்றே வளைக்கும். இதை வைத்தே அதன் இருப்பை விஞ்ஞானிகள் உறுதி செய்கின்றனர்.

இது குறித்து வார்சா பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் ஆண்ட்ரெஜ் உடால்ஸ்கி கூறுகையில், நமது பால்வீதி மண்டலத்தில் நட்சத்திரங்களை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய முரட்டு கிரகங்கள் இருக்கலாம் என கூறினார்

2026-ல் ஏவப்படவுள்ள நாசாவின் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ தொலைநோக்கி மற்றும் 2028-ல் ஏவப்படவுள்ள சீனாவின் ‘எர்த் 2.0’ செயற்கைக்கோள் போன்றவை விண்வெளியில் மறைந்திருக்கும் இன்னும் ஆயிரக்கணக்கான முரட்டு கிரகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top