Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் புதிய ஸ்கேனர் கருவி

சென்னை

ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் புதிய ஸ்கேனர் கருவியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கியது

ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் புதிய ஸ்கேனர் கருவியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கியது

சென்னை அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு ரூ.22 லட்சம் செலவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வழங்கிய அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திங்கள்கிழமை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் கீழ் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. சுமார் 140 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இம்மருத்துவமனையில் வடசென்னை மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள், பெண்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்  பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது சமூக பொறுப்பான்மை திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்புள்ள அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் ஒன்றை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வழங்கிட முன்வந்தது.

இதனையடுத்து இக்கருவியை முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாந்தி இளங்கோவனிடம் ஒப்படைத்தார்.

இக்கருவியில் புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. இக்கருவி மூலம் கரு வளர்ச்சி, வயிற்றில் உள்ள குழந்தைகளின் செயல்பாடுகள், இதயத்துடிப்பு உள்ளிட்டவைகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கருவுற்ற பெண்களுக்கு கூடுதலாக நல்ல முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என டாக்டர் சாந்தி இளங்கோவன் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது குறைந்த எடையில் பிறந்து நீண்ட சிகிச்சைக்குப் பிறகு போதிய வளர்ச்சியை எட்டிய இரட்டை குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்டவைகளை டாக்டர் கலாநிதி வீராசாமி  வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி,  பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் சுஸ்மித் தாஸ், வெட்கட்ராமன் அய்யர், ஹரிகிசன் , தி.மு.க பகுதி செயலாளர்கள் சுரேஷ், செந்தில்குமார், ஜெபதாஸ்பாண்டியன் உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top