Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம்: மறுவாழ்வு, மறுகுடியமர்வு குழு ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பான, மாவட்ட அளவிலான மறுவாழ்வு, மறுகுடியமர்வு குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பானமாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் தொடர்பான, மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (12.05.2023) நடைபெற்றது.

கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 448.81 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 143.32 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்கள்  நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.

மேற்கண்ட திட்டத்திற்காக 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. மேலும் 14 கிராமங்களுக்கு 19(2) விளம்புகை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30-2013)-ன் படியும் மற்றும் தனி நபர் பேச்சுவார்த்தை மூலமும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் 10 வருவாய் கிராமங்களில் 10 கட்டங்களாக 76.16 ஹெக்டேர் நிலங்கள் ரூ.59.59 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலமெடுப்பு பணிகளுக்காக இழப்பீட்டுத்தொகை வழங்கு வதற்கு ஏதுவாக மூன்று பட்டா மாறுதல் முகாம்கள் நடத்தப் பட்டுள்ளன. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விராலிமலை வட்டம், குன்னத்தூர் கலிமங்கலம், புதுக்கோட்டை தாலுகா நத்தம்பண்ணை, செம்பாட்டூர் மற்றும் கவிநாடு மேற்கு ஆகிய கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கான மறுவாழ்விற்காக, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட நிருவாகி,  இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர், நில நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம்  நடத்தப் பட்டது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பத்திரப் பதிவுத்துறை, பொதுப் பணித்துறை, நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் கிராமங்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மேற்கண்ட காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top