Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

மாபெரும் தமிழ் கனவு திட்டம்: அரசு மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி மாணவருக்கு பரிசளித்த ஆட்சியர் மெர்சி ரம்யா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு திட்டம்” நிகழ்ச்சி  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது

மாபெரும் தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்,  ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிப்பிற்கிணங்க, மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியானது 2023 ஜூலை மாதம் முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடையே இத்தகைய நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் அவர்கள் மத்தியில் தமிழர் மரபு, பண்பாடு, சமத்துவ வளர்ச்சி ஆகியவற்றில் ஆர்வமும், அக்கறையும் தூண்டப்பட்டு ஓர் ஆரோக்கியமான எதிர்காலம் உருவாகும் என்ற நோக்கில்   நடத்தப்படுகிறது.

 நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதன் பொருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகம் – மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டம் நிகழ்ச்சி  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடக்கி வைக்கப்பட்டு நடத்தப் பட்டது.

மேலும் தமிழ்ப்பெருமிதம் நூலிலிருந்து பல்வேறு தலைப்பு களில் சிறப்பாக பேசிய 6 மாணவச்செல்வங்களுக்கு நூல் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தமிழ் இணையக் கல்விக்கழகமும் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து ‘மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த ஆண்டில் சிறப்பாக நடத்தி முடித்தது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில், 200 சொற் பொழிவுகள், 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வகையில் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன் 100-வது நிகழ்ச்சியில்  தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும், வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டுசேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். தமிழர் மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இங்கு பகிரப்படும் கருத்துகளைக் கேட்டு, நீங்கள் பயனடைவதுடன் பிற மாணவர்களிடமும் இந்தக் கருத்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

மேலும், உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சி அரங்கும் உள்ளது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , சமூகநீதிப் பொருளாதாரமும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் பேசினார். மேலும் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் சிறந்த வினாக்களை வினவிய 5 மாணவர்களுக்கு  கேள்வியின் நாயகன்- நாயகி என்ற  பாராட்டுச் சான்றிதழ் மற்றும்  பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, அரசு மருத்தவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்  முருகேசன்,

நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) திருமதி.ஜ.சபீர்பானு, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top