Close
மார்ச் 7, 2026 12:06 மணி

சிக்கலில் அமெரிக்கா, ஊதியம் இன்றி தவிக்கும் மக்கள்

அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக செனட் குடியரசுக் கட்சியினர் ஃபிலிபஸ்டரை அகற்ற வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்

அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழல், அந்நாட்டு வரலாற்றில் மிக நீண்ட மற்றும் சிக்கலான நெருக்கடிகளில் ஒன்றாகும். இதன் நேரடி விளைவாக, இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களின் மாதாந்திர ஊதியம் இன்றித் தவித்து வருகின்றனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், எஃப்.பி.ஐ. அதிகாரிகள், மற்றும் தேசியப் பூங்கா பணியாளர்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுபவர்கள் கூட, ஊதியம் இல்லாமல் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருபுறம், வங்கிக் கடன்கள், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூடப் பணம் இல்லாமல், அமெரிக்கக் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

இந்த அரசாங்க முடக்கம், அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட முடக்கமாக மாறியுள்ளது. உணவு உதவி பெறும் அமெரிக்கர்கள் நவம்பர் 1 முதல் சலுகைகளைப் பெற வமுடியாது.

அமெரிக்காவில் அரசாங்கத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பதால் நெருக்கடி நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் இந்த முடக்கத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர, குடியரசுக் கட்சியினர் தங்கள் “டிரம்ப் அட்டையைப் பயன்படுத்தி”  செனட் ஃபிலிபஸ்டரை நீக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்

ஃபிலிபஸ்டர் என்பது அமெரிக்க செனட்டில் ஒரு வழக்கமான நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விதி, பெரும்பான்மை கொண்ட கட்சிகள் கூட தங்கள் விருப்பப்படி மசோதாக்களை நிறைவேற்றுவதைத் தடுக்கிறது.

ஒரு மசோதாவின் மீதான வாக்கெடுப்பை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ, செனட் தளத்தில் விவாதத்தை வேண்டுமென்றே நீட்டிக்கும் ஒரு சட்ட விதியாக ஃபிலிபஸ்டர் உள்ளது

இந்த ஃபிலிபஸ்டரை முடிவுக்குக் கொண்டு வர, ‘குளோஷர்’  என்ற தீர்மானம் அழைக்கப்பட வேண்டும். இதற்கு 60 செனட் வாக்குகளும் தேவை

பாரம்பரியமாக, ஃபிலிபஸ்டர் என்பது சிறுபான்மைக் கட்சியின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு அரணாக கருதப்படுகிறது.

குடியரசுக் கட்சியின் பல தலைவர்கள், ஃபிலிபஸ்டர் விதியை நீக்குவதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டிரம்ப் இந்த அவசர முடிவை எடுக்க வலியுறுத்தியுள்ளார்

மறுபுறம், நாட்டின் ஜனாதிபதி இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் காட்ட வேண்டிய அவசரத்தையோ அல்லது கரிசனமோ காட்டாமல், முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் ஸ்தம்பித்துப் போயிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசாங்கம் முடக்கப்பட்டிருக்கும் நாட்களிலும், டிரம்ப் தொடர்ந்து தனது பிரத்யேக கோல்ஃப் மைதானங்களுக்குச் சென்று நேரத்தைச் செலவிட்டு வருவது மக்களின் துயரத்தின் மீதான அலட்சியத்தைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தலைநகரில் இந்தப் பிரச்சனை புகைந்து கொண்டிருக்கும் வேளையில், டிரம்ப் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த உல்லாசப் பயணங்களுக்குப் பல கோடி டாலர்கள் செலவிடப்படுகிறது. இந்தச் செலவுகளும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன.

நிதி நெருக்கடியால் அல்லல்படும் சாதாரண அரசு ஊழியர்களைச் சந்திப்பதை விட, பில்லியனர்கள், பெருநிறுவன முதலாளிகள், மற்றும் உலகப் பணக்காரர்களைச் சந்திப்பதிலேயே டிரம்ப் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புகள் அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவுவதற்குப் பதிலாக, பெரும் பணக்காரர்களுடனான தனது தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த முடக்கம் ஒரு அரசியல் மோதலாகத் தொடங்கினாலும், இலட்சக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு மனித நெருக்கடியாக அது மாறியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரு நாட்டின் தலைவர் தனது நேரத்தையும் ஆற்றலையும் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றன.

அரசு முடக்கத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர் முதல் 14 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், அரசாங்க செலவினங்களில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% வரை குறையக்கூடும் என்றும் பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top