Close
மார்ச் 7, 2026 1:26 மணி

22 வயதில் கோடீஸ்வரர்கள் ஆன மூன்று நண்பர்கள்

ஆதர்ஷ் ஹிரேமத், சூர்யா மிதா மற்றும் ப்ரெண்டன் ஃபுடி

ஏஐ துறையின் அசுர வளர்ச்சியால், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது நண்பர்கள், உலகின் மிக இளைய கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வரலாறு படைத்துள்ளனர்.

இவர்கள் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 23 வயதில் பில்லியனர் ஆன சாதனையை முறியடித்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவை மையமாகக் கொண்ட ‘மெர்கோர்’ என்ற ஏஐ ஆட்சேர்ப்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஆதர்ஷ் ஹிரேமத், சூர்யா மிதா மற்றும் ப்ரெண்டன் ஃபுடி ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்:

சமீபத்தில், இவர்களின் ‘மெர்கோர்’ நிறுவனம் 350 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,900 கோடி) புதிய நிதியைத் திரட்டியது. இந்த நிதி திரட்டலின் மூலம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 10 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 83,000 கோடி) உயர்ந்தது.

நிறுவனத்தின் பங்கு மதிப்பின்படி, இந்த மூன்று நிறுவனர்களும் தலா 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பைப் பெற்று, கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளனர்.

இந்த மூவரும் உயர்நிலைப் பள்ளியில் இருந்தே நண்பர்கள். தேசிய விவாதப் போட்டிகளுக்காகத் தயாராகும் போது அவர்களுக்குள் தொழில் தொடங்கும் ஆர்வம் அதிகரித்தது. பின்னர், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர்கள் மெர்கோர் நிறுவனத்தைத் தொடங்கினர்.

முதலில், இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்களை அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்களுடன் இணைக்கும் ஃப்ரீலான்ஸ் சந்தையாக இது இருந்தது. தற்போது மெர்கோர், சட்டம், மருத்துவம், நிதி மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ளது.

ஏஐ அல்காரிதம்களால் செய்ய முடியாத நுணுக்கமான மனிதத் தீர்ப்பைச் செலுத்தவும், தரவுகளைச் சரிபார்க்கவும் இந்த நிபுணர்களைப் பயன்படுத்த பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த மூன்று நிறுவனர்களும் கல்லூரிப் படிப்பைத் தவிர்த்து, இளம் தொழில்முனைவோர்களுக்கு நிதி வழங்கும் ‘தீல் ஃபெல்லோஷிப்’ திட்டத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இவர்கள் மிக விரைவாகத் தங்கள் வணிகத்தில் கவனம் செலுத்த உதவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top