ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய தந்தை – மகன் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான 50 வயது சாஜித் அக்ரம் இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இவர் 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவருடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய இவரது மகன் நவீத் அக்ரம் (24), ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்.
சாஜித் அக்ரம் இன்னும் இந்திய பாஸ்போர்ட்டையே வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதே சமயம் இவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர். கடந்த மாதம் இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளனர். அப்போது சாஜித் தனது இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியதாகப் பிலிப்பைன்ஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களின் காரில் இருந்து இரண்டு ஐஎஸ் கொடிகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் ‘இஸ்லாமிய அரசு’ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் பயணத்தின் போது ராணுவ ரீதியிலான பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஹைதராபாத்தில் உள்ள சாஜித்தின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் 27 ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாகவும், அங்கு ஒரு ஐரோப்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் அவருக்கும் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சாஜித் ஒரு தீவிரவாத மனநிலை கொண்டவர் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மகன் நவீத் அக்ரம் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




