Close
மார்ச் 7, 2026 12:06 மணி

சவுதியிலிருந்து 24,000 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் நாடு கடத்தல்!

வெளிநாடுகளில் திட்டமிட்ட முறையில் பிச்சை எடுக்கும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாகிஸ்தான் குடிமக்கள் மீது வளைகுடா நாடுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானியர்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஒரே ஆண்டில் 24,000 பேர் வெளியேற்றம்
இந்த ஆண்டு மட்டும் பிச்சை எடுத்த குற்றச்சாட்டின் கீழ் 24,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா அதிரடியாக நாடு கடத்தியுள்ளது. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்நாட்டிற்கு வரும் பாகிஸ்தானியர்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சித் தகவல்:
பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த விவகாரத்தின் தீவிரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது:

சவுதி அரேபியா இந்த ஆண்டு பிச்சை எடுத்ததாகக் கூறி 24,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியது. துபாய் சுமார் 6,000 நபர்களை திருப்பி அனுப்பியது, அதே நேரத்தில் அஜர்பைஜான் சுமார் 2,500 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை நாடு கடத்தியது.

2025-ஆம் ஆண்டில் மட்டும், சட்டவிரோத இடப்பெயர்வு மற்றும் பிச்சை எடுக்கும் கும்பல்களைத் தடுக்க 66,154 பயணிகள் பாகிஸ்தான் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி இயக்குநர் ஜெனரல் ரிஃபாத் முக்தார் கூறுகையில், “இந்தக் கும்பல்கள் பாகிஸ்தானின் சர்வதேச நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை விளைவிக்கின்றன. இவர்கள் வளைகுடா நாடுகளைத் தவிர்த்து, தற்போது ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து போன்றவற்றிற்கும் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்திப் பரவி வருகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

“பாகிஸ்தானில் இது ஒரு வறுமையின் வெளிப்பாடாக இல்லாமல், மிகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு ‘தொழிலாக’ மாறிவிட்டது. இந்தத் தொழில் இப்போது மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.” என்று சட்ட வல்லுநர் ரஃபியா ஜகாரியா கூறினார்.

கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே சவுதி அரேபியா இது குறித்து பாகிஸ்தானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மெக்கா மற்றும் மதீனாவிற்கு உம்ரா விசாக்களில் வருபவர்கள் புனிதத் தலங்களுக்கு வெளியே பிச்சை எடுப்பதைத் தடுக்கத் தவறினால், அது ஹஜ் பயணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரியாத் நிர்வாகம் எச்சரித்திருந்தது.

மேற்கு ஆசிய நாடுகளில் பிச்சை எடுத்ததாகக் கைது செய்யப்படுபவர்களில் 90% பேர் பாகிஸ்தானியர்களே என்று அந்நாட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜீஷான் கன்சாடா ஒப்புக்கொண்டுள்ளது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top