Close
மார்ச் 7, 2026 1:40 மணி

ஈரான் வன்முறை: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர ஆலோசனை

ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தியது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரானின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இதுவரை குறைந்தது 2,615 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு ஈரானில் ஏற்பட்ட மிக மோசமான வன்முறை என்று கூறப்படுகிறது.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் சார்பில் பேசிய உதவி பொதுச்செயலாளர் மார்த்தா போபி, ஈரானில் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏற்கனவே மோசமாக உள்ள சூழலை மேலும் சீர்குலைக்கும் என்று எச்சரித்தார்.

அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தூதரக ரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் மட்டுமே தீர்க்க வேண்டும். “சர்வதேச சட்டங்களின்படி மோதல்கள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரானிய அதிருப்தியாளரான மசிஹ் அலினெஜாட், ஈரான் அரசுக்கு எதிராக ஐநா உடனடியாகச் செயல்படத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா சட்டவிரோதமாகத் தலையிடுவதாக ஐநா-விடம் முறையிட்டார்.

போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்தவில்லை என்றால் “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்று ஈரான் அதிகாரிகளுக்கு அமெரிக்கா செய்தி அனுப்பியுள்ளது. இதன் விளைவாக, நடைபெறவிருந்த 800 மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி7 நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், வன்முறை தொடர்ந்தால் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளன.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஈரானின் நிலைமை தற்போது சீராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ஆதரவான ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஈரானில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க-இஸ்ரேலிய சதி தான் காரணம் என்று ஆதாரமின்றி குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈரானில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டங்கள் ஓரளவுக்குத் தணிந்துள்ள போதிலும், வான்வெளி போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top