Close
மார்ச் 7, 2026 1:26 மணி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்? தலைவர்களைக் குறிவைக்கவும் ஆட்சி மாற்றத்திற்கும் திட்டம்

வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையேயான மோதல் போக்கு தற்போது போரின் விளிம்பிற்குச் சென்றுள்ளது. ஈரானுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

சமீபத்திய உளவுத்துறை மற்றும் ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, அமெரிக்க இராணுவத் திட்டமிடல் தற்போது ஒரு முன்னேறிய நிலையை எட்டியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை மட்டும் சிதைக்காமல், ஈரானின் முக்கியத் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குவது ஒரு முக்கிய விருப்பமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்த 12 நாள் போரின் போது, இஸ்ரேல் ஈரானின் உயர் தளபதிகளைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியது. அதே போன்ற ஒரு உத்தியை இப்போது அமெரிக்காவும் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெறும் எச்சரிக்கை அல்லது குறைந்தபட்சத் தாக்குதல்களோடு நிறுத்திக் கொள்ளாமல், ஈரானின் தற்போதைய மதவாத ஆட்சியைத் தூக்கியெறிந்து ‘ஆட்சி மாற்றத்தை’  ஏற்படுத்துவதே ட்ரம்பின் இறுதி இலக்காக இருக்கக்கூடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரானில் தற்போது நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஈரானிய மக்களைத் தூண்டிவிடுவதன் மூலமோ அல்லது நேரடி இராணுவ வலிமை மூலமோ ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்க அமெரிக்கா முனைகிறது.

அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார். “ஈரான் அணுசக்தி விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவது அதற்கு நல்லது. இல்லையெனில், மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வார இறுதியில் கூட தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

ஈரானைச் சுற்றி அமெரிக்கா தனது மிகப்பெரிய விமானப் படைகளைத் திரட்டியுள்ளது. F-35 மற்றும் F-22 ராப்டர் போர் விமானங்கள் மத்திய கிழக்குப் பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை நிலத்தடியில் ஊடுருவித் தாக்கும் திறன் கொண்ட பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சவில்லை. “எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அனைத்தும் எங்களின் இலக்குகளாக மாறும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார். மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார் என ஈரான் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன. ஒருவேளை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதோடு, மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தையும் தோற்றுவிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ட்ரம்பின் இந்தத் தன்னிச்சையான போர் முடிவைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றம்  முயற்சி மேற்கொண்டு வருகிறது. அடுத்த சில நாட்கள் மத்திய கிழக்குப் பகுதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாட்களாகக் கருதப்படுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top