Close
மார்ச் 7, 2026 9:32 காலை

ஏ ஐ புரட்சி: லட்சக்கணக்கான வேலைகளுக்கு ஆபத்து?

வேலைவாய்ப்புச் சந்தையில் ஏஐ ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவரும், பிரபல தொழிலதிபருமான ஆண்ட்ரூ யாங் ஒரு அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, இது ஒரு மெதுவான மாற்றமாக இருக்காது, மாறாக ஒரு பெரும் ‘சுனாமி’ போலத் தாக்கும்.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
முந்தைய தொழில்நுட்பப் புரட்சிகள் பெரும்பாலும் தொழிற்சாலைப் பணியாளர்களைப் பாதித்தன. ஆனால், இந்த முறை ‘ஒயிட் காலர்’ என்று அழைக்கப்படும் அலுவலகப் பணியாளர்களுக்கே அதிக ஆபத்து இருப்பதாக யாங் கூறுகிறார்.

மென்பொருள் பொறியாளர்கள்: ஏ ஐ தானாகவே கோட் எழுதும் திறன் பெற்றுள்ளதால், இவர்களின் தேவை குறையும்.

சந்தைப்படுத்துபவர்கள் : விளம்பர வாசகங்கள் மற்றும் உத்திகளை ஏ ஐ நிமிடங்களில் உருவாக்கிவிடுகிறது.

நடுத்தர மேலாளர்கள் : தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகளை ஏ ஐ சிறப்பாகச் செய்கிறது.

வாடிக்கையாளர் சேவை : சாட்பாட்கள் மனிதர்களை விட வேகமாகப் பதிலளிக்கின்றன.

“நீங்கள் ஒரு மேஜையில் அமர்ந்து, நாள் முழுவதும் கணினியைப் பார்த்து வேலை செய்பவரா? அப்படியென்றால் இந்த எச்சரிக்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.” என்று ஆண்ட்ரூ யாங் எச்சரித்துள்ளார்

ஒரு நிறுவனம் ஏ ஐ-ஐப் பயன்படுத்தித் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து லாபம் ஈட்டத் தொடங்கினால், மற்ற போட்டி நிறுவனங்களும் அதே பாதையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். பங்குச் சந்தையும் இத்தகைய செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களையே ஆதரிக்கும்

வேலை இழப்பு என்பது வெறும் தனிநபர் வருமானத்தை மட்டும் பாதிக்காது. இது சமூகத்தின் மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்: அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராதபோது, அவர்களைச் சுற்றியுள்ள உணவகங்கள், சலவை நிலையங்கள் மற்றும் கடைகள் நஷ்டமடையும். வேலை இழப்பு அதிகரித்தால் வீடுகளுக்கான தேவை குறையும், இதனால்  சொத்து மதிப்பைச் சரியும். வருமானம் இல்லாமல் கடன்களைத் திருப்பச் செலுத்த முடியாமல் பலர் திவால் நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஆண்ட்ரூ யாங் நீண்டகாலமாக ‘அனைவருக்கும் அடிப்படை வருமானம்’ திட்டத்தைப் பரிந்துரைத்து வருகிறார். தொழில்நுட்பத்தால் மக்கள் வேலை இழக்கும்போது, அவர்கள் உயிர்வாழ அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்பது இவரது வாதம்.

மேலும், ஏ ஐ நிறுவனங்கள் மீது வரி விதிப்பதன் மூலமும், ஊழியர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொடுப்பதன் மூலமும் இந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்று கூறுகிறார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top