Close
மார்ச் 7, 2026 9:32 காலை

ஈரானின் பிரம்மாண்ட ஆயுதக் கிடங்கு: பின்னணியில் சீனாவின் ரகசிய கரங்கள்?

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அபாரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் பலம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கடும் தாக்குதல்களுக்கு இடையிலும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது, அதன் ஆயுதக் கிடங்கின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு சீனாவின் மறைமுக ஆதரவுதான் காரணமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகை உலுக்கின. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மட்டுமின்றி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட 11 நாடுகளின் இலக்குகளை ஈரானிய ஏவுகணைகள் தாக்கின. ஈரானின் முக்கிய கட்டளை மையம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதன் துணைப் பிரிவுகள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.

ஈரானின் ஆயுதக் கிடங்கு குறைந்து வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதற்கு மாறாக, ஈரானின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் விளைவாக, வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தங்களின் ஆயுதக் கையிருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஈரான் – சீனா இடையிலான ராணுவக் கூட்டணி: வரலாறு என்ன?

ஈரானின் ஏவுகணைத் திட்டங்களில் சீனாவின் பங்கு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 1980-களின் தொடக்கத்தில் ஈரான்-ஈராக் போரின்போது, மேற்கத்திய நாடுகள் ஈரானுக்கு ஆயுதத் தடை விதித்தன.  அந்தச் சமயத்தில் சீனா 1986-ல் HY-2 மற்றும் சி-801 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கி ஈரானுக்கு உதவியது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, சீனா ஈரானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருந்து வருகிறது. 2005-ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடைகளுக்குப் பிறகு, சீனா நேரடியாக ஆயுதங்களை விற்பதை நிறுத்தியது. இருப்பினும், “இரட்டைப் பயன்பாட்டு” தொழில்நுட்பம் என்ற பெயரில் ஈரான் தனது ஆயுதங்களை உருவாக்க சீனா தொடர்ந்து உதவி வருகிறது.

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளுக்குத் தேவையான மைக்ரோசிப்கள், வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் மின்னணு பாகங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏவுகணைகளுக்கான திட எரிபொருள் தயாரிக்கத் தேவையான சோடியம் பெர்குளோரேட் மற்றும் அம்மோனியம் பெர்குளோரேட் போன்ற வேதிப்பொருட்களை சீனா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஈரானின் ‘நூர்’ மற்றும் ‘காதர்’ ஏவுகணைகள் சீனாவின் சி-802 ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களே ஆகும்.

சீனாவின் விரிவான தொழில்நுட்ப உதவி இல்லாமல், ஈரான் இன்று கொண்டுள்ள ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திறன்களை எட்டியிருக்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்

சமீபத்திய தகவல்களின்படி, சீனா ஈரானுக்கு அதிநவீன CM-302 சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போர் தொடங்குவதற்கு முன்னதாகவே HQ-16 மற்றும் HQ-17AE போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை சீனா ஈரானுக்கு அனுப்பியதாக ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு ஈடாக, ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை சீனாவிற்கு அனுப்பி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார மற்றும் ராணுவ உறவை உறுதிப்படுத்துகிறது.

ஈரானின் இந்த ஏவுகணைத் திறன் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கேடயமாகப் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “தங்கள் ஏவுகணைகள் தற்காப்பிற்காக மட்டுமே என்றும், அவற்றின் வரம்பு 2,000 கி.மீட்டருக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சீனா இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், கள நிலவரங்கள் வேறு கதையைக் கூறுகின்றன. ஈரானின் ‘ஷாஹீத்’ ட்ரோன்கள் முதல் ‘ஃபட்டா’ ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் வரை அனைத்திலும் சீனத் தொழில்நுட்பத்தின் தடம் பதிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மத்திய கிழக்கில் நிலவும் இந்த நிழல் யுத்தத்தில் சீனா ஒரு முக்கிய ‘சைலண்ட் பார்ட்னராக’ செயல்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top