Close
மார்ச் 10, 2026 12:20 மணி

அமெரிக்க போர் விமானங்களை முடக்கும் சீனாவின் மாஸ்டர் பிளான்!

உலக வல்லரசுகளுக்கு இடையேயான மோதல் தற்போது ஆயுதங்களைக் கடந்து, தொழில்நுட்பம் மற்றும் வளங்களைச் சார்ந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானங்களை முடக்கும் வலிமை சீனாவிடம் இருப்பதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்குச் சீனா ஏவுகணைகளையோ அல்லது நேரடித் தாக்குதலையோ பயன்படுத்தப் போவதில்லை. ஆனால் அரிய வகை தனிமங்கள் தான் சீனாவின் பிரம்மாண்ட ஆயுதம்.

அமெரிக்காவின் F-35 விமானங்கள் உலகின் அதிநவீன போர் விமானமாகக் கருதப்படுகிறது. இந்த விமானத்தைத் தயாரிக்கவும், அதன் எலக்ட்ரானிக் பாகங்கள் இயங்கவும் ‘அரிய வகை தனிமங்கள்’ மிக அவசியமாகும்.
ஒரு F-35 போர் விமானத்தைத் தயாரிக்க சுமார் 417 கிலோ (920 பவுண்டுகள்) அரிய வகை தனிமங்கள் தேவைப்படுகின்றன. F-35 விமானத்தின் ஒவ்வொரு முக்கிய பாகத்திலும் சீனாவின் இந்தத் தனிமங்கள் நீக்கமற நிறைந்துள்ளன

  • மேக்னட்டுகள்: விமானத்தின் மின்சார மோட்டார்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
  • லேசர் அமைப்புகள் : இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும், ஏவுகணைகளை வழிநடத்தவும் இவை அவசியம்.
  • ரேடார் தொழில்நுட்பம்: எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் இருக்கவும், தனது ரேடார் மூலம் எதிரிகளை வேட்டையாடவும் இவை பயன்படுகின்றன.

இந்தத் தனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் சுமார் 95% சீனாவே தன் கைவசம் வைத்துள்ளது. அமெரிக்கா தனது தேவைக்கு 80% சீனாவையே சார்ந்துள்ளது.

போர் முனையில் சீனா செய்யப்போகும் ‘சைலண்ட்’ அட்டாக்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்தால், சீனா நேரடியாகப் போரில் இறங்காமல் தனது வர்த்தக மற்றும் ஏற்றுமதி விதிகளைப் பயன்படுத்தி அமெரிக்காவை முடக்க முடியும்.

சீனா இந்த அரிய வகை தனிமங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்தால், அமெரிக்காவால் புதிய F-35 விமானங்களைத் தயாரிக்க முடியாது. ஏற்கனவே உள்ள விமானங்களில் ஏதேனும் பாகங்கள் பழுதானால், அவற்றைச் சரிசெய்யத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கவும் இந்தத் தனிமங்கள் தேவை. விநியோகம் நின்றால், அமெரிக்காவின் விமானப் படை மெல்ல மெல்ல வலுவிழக்கும்.

அமெரிக்கா தற்போது தனது சொந்த நாட்டில் இந்தத் தனிமங்களைச் சுரங்கங்கள் மூலம் எடுக்கத் திட்டமிட்டாலும், அதைச் முழுமையாகச் செயல்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதுவரை சீனாவைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எதிர்காலப் போர்கள் வெறும் எல்லைகளில் மட்டும் நடக்கப்போவதில்லை; அவை தொழிற்சாலைகளிலும், வர்த்தக ஒப்பந்தங்களிலும் நடக்கப்போகின்றன என்பதற்கு இதுவே சாட்சி. ஈரானுடனான பதற்றத்தில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வலிமையாகத் தெரிந்தாலும், சீனாவின் இந்த ‘அரிய வகை தனிம’ ஆயுதம் அமெரிக்காவின் போர் வியூகத்தையே மாற்றியமைக்கக் கூடியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top