மத்திய தரைக்கடலில் ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ எனும் எல்என்ஜி எரிவாயு ஏந்தி வந்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை “சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்” என்றும், இது மிகப்பெரிய விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
மார்ச் 3-ஆம் தேதி, மத்திய தரைக்கடலின் மால்டா கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 168 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
1,00,000 கன மீட்டர் எல்என்ஜி ஏற்றிச் சென்ற இந்தக் கப்பலில் 30 ரஷ்ய மாலுமிகள் இருந்தனர். கடல் மற்றும் வான்வழி ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் கப்பலின் இன்ஜின் மற்றும் மின்சாரம் செயலிழந்தது. இதன் விளைவாகக் கப்பலில் தீ விபத்தும், எரிவாயு வெடிப்பும் ஏற்பட்டது.
கப்பல் தீப்பற்றி எரிந்த போதிலும், மாலுமிகள் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டு உயிர் காக்கும் படகுகள் மூலம் வெளியேறினர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த ரஷ்ய மாலுமிகளைக் கொண்ட மற்ற கப்பல்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் உடனடியாக இறங்கின. அன்றிரவு 8:30 மணியளவில் அனைத்து மாலுமிகளும் ஒரு டேங்கர் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தின் போது ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறை குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:
தீ விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு மாலுமிகளை அவசரமாக வெளியேற்ற மால்டா நாட்டின் கடல்சார் அதிகாரிகள் உதவி செய்ய மறுத்துவிட்டனர். ஐரோப்பிய நாடுகளின் உதவி கிடைக்காத நிலையில், லிபியாவின் கடல்சார் மீட்புப் பிரிவினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை பெங்காசி துறைமுகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கப்பல் தானாகவே தீப்பற்றி மூழ்கியதாக மேற்கத்திய ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்பின. இது ஒரு சிவிலியன் இலக்கின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல். இது மிகப்பெரிய உயிர் இழப்பையும், சுற்றுச்சூழல் பேரழிவையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும். சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் போர்க்குற்றம் என்று தெரிவித்தார்.
மேலும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் கரைக்கு மிக அருகில் இந்தத் தாக்குதல் நடந்தும், இதுவரை எந்த ஒரு ஐரோப்பிய நாடும் இதனைக் கண்டிக்காதது ரஷ்யாவிற்குப் பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். காயமடைந்த இரண்டு மாலுமிகளும் மார்ச் 10 அன்று சிறப்பு விமானம் மூலம் ரஷ்யாவிற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.




