Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

பெண்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைத்தபாடில்லை

புதுக்கோட்டை

மகளிர் தின விழாவில் பேசுகிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்.

சர்வதேச மகளிர் தினம் 106 ஆவது ஆண்டாக கொண்டாடப்படும் இந்த நிலையிலும் பெண்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைத்தபாடில்லை  என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்.

சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று உலக மகளில் தினவிழா பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசியது: ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கான அங்கன்வாடியில் நாளொன்றுக்கு குழந்தைகளின் உணவுக்காக அரசு 80 பைசா வீதம் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தித் தருமாறும், அதன் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேறவில்லை. வராக்கடன் என்கிற பெயரில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவிற்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, ஏழைக் குழந்தைகளைப் பற்றி கவலைப்படவில்லை.

நாம் 106-ஆவது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையிலும் பெண்களுக்கான உரிமைகள் கிடைத்தபாடில்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்திலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும்.

புதுக்கோட்டை
புதுகையில் நடந்த மகளிர் தின விழாவில் பங்கற்றோர்

முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்பது கிடையாது. ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் அளித்து வஞ்சிக்கப்படுகிறோர். கேரளாவில் சம வேலைக்கு சமஊதியம் வழங்கும்போது தமிழகத்தில் ஏன் சாத்தியம் இல்லை என்றார் அவர்.

கருத்தரங்கிற்கு சிஐடியு மாநில செயலாளர் எஸ்.தேவமணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா ஆகியோர் தலைமை வகித்தனார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.காலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜி.கிரிஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை பேருந்து நிலைத்திலிருந்து கருத்தரங்கம் நடைபெற்ற கே.எம்.மஹால் வரை பேரணி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top