Close
ஜூலை 23, 2026 7:07 மணி

குறைகளை கூறினால் நாமக்கல் மாநகராட்சி அலுவலர்கள் கேட்பதில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மேயர் கலாநிதி பேசினார். அருகில் துணை மேயர் பூபதி, கமிஷனர் செல்வபாலாஜி ஆகியோர்.

கவுன்சிலர்கள் குறைகளை கூறினால், மாநகராட்சி அலுவலர்கள் எந்த பணிகளையும் செய்வதில்லை, தவெகவினர் கூறும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என, நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினார்

நாமக்கல் நகராட்சியாக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தல் 39 வார்டுகளுக்கு நடைபெற்றது. 39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று கவுன்சிலராக பொறுப்பேற்றனர். பின்னர் கூடுதலாக 12 பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டு நாமக்கல் மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி, கமிஷனர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்

சரவணன் (16 வது வார்டு கவுன்சிலர்): தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. மேலும் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த கூறினால் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை, அதே நேரத்தில் தவெக எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கூறினால் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர். அதிகாரிகள் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

நந்தகுமார் (9வது வார்டு கவுன்சிலர்): நல்லிபாளையத்திலிருந்து முதலைப்பட்டி வரை உள்ள சர்வீஸ் ரோட்டில் தற்போது பயணிகள் பேருந்துகள், கார்கள், டூ வீலர்கள் போன்றவை அதிக அளவில் செல்கின்றன. அப்பகுதியில் மாநகராட்சி மூலம் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் விபத்துக்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எனவே முதலைப்பட்டி முதல் வள்ளிபுரம் வரை, சர்வீஸ் ரோடு பகுதியில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். மேலும் இப்பகுதியில் ரோட்டின் இரு புறங்களிலும் கோழிக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன அவற்றை தடை செய்ய வேண்டும் என்றார்

ஈஸ்வரன்: (38வது வார்டு கவுன்சிலர்): நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 9 கிராம ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனைக் காரணம் காட்டி சுமார் 4 ஆண்டுகளாக நகரின் பல பகுதிகளில் ரோடு அமைக்கும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

கிருஷ்ண மூர்த்தி (5வது வார்டு கவுன்சிலர்) : நாமக்கல் மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு தொடர்ந்து பல நாட்கள் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு பதிலைத்த ஆணையர் கூறியதாவது: மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் தூய்மைப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தூய்மைப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தெருவிளக்குகள் அமைக்க ஆவன செய்யப்படும். நாமக்கல் மாநகராட்சிக்கு மோகனூர் மற்றும் ஜேடர்பாளையம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் குடிநீர் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு நாள் ஒன்று 40 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 30 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. மேலும் ஒரு மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு கூடுதாலக 60 லட்சம் தண்ணீர் கிடைக்ககும். விரைவில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சீராகும்.

மேலும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top