திருவண்ணாமலை மாவட்டத்தில் 8.63 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1 வயது முதல் முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடற்புழு நீக்க மாத்திரைகளை, பள்ளி மாணவர்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 6,61,714 குழந்தைகளுக்கும்,
20 முதல் 30 வயதிற்குட்பட்ட 2,01,513 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாத்திரை பெற இயலாதவர்களுக்கு, வரும் 17ம் தேதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியில், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மிகி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 மி.கி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது.
குடற் புழுத் தொற்றினால், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை போன்ற பாதிப்புகளை இந்த மாத்திரைகள் தடுக்கிறது. குடற்புழு நீக்கம் செய்யப்படுவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை பாதிப்பு தடுக்கப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழி ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.