Close
மே 29, 2025 8:04 காலை

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில்  மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு  தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவிலில் நேற்று அதிகாலை 5.00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. காலை 5.30 மணி அளவில் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனம் செய்யக்கூடிய பக்தர்கள் 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் கோவில் உள்ளேசென்று சாமி தரிசனம் செய்து திருமஞ்சன கோபுர வீதி வழியாக பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.

50 ரூபாய்கட்டண தரிசனத்தில் வரக்கூடிய பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுர வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டு திருமஞ்சனம் கோபுர வீதி வழியாக வெளியேற்றப்பட்டனர். கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

ஞாயிறு விடுமுறை மற்றும் கோடை விடுமுறை ஒட்டி நேற்று அதிகாலை முதலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மனி அம்மன் கோபுரம் நுழைவாயிலில் 50 ரூபாய் கட்டண தரிசன பக்தர்கள் மற்றும் விஐபிகள் அனுமதிக்கப்படுவதால் விஐபிகளும் மற்றும் கட்டண தரிசன பக்தர்களும் 1000க்கும் மேற்பட்டோர் நுழைவாயில் முன்பு ஒரே நேரத்தில் குவிந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தடுத்தாலும் தடுப்பினையும் மீறி முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே நுழைய முற்பட்டதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டது.

காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. மதியத்திற்குப் பிறகு பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரிக்க தொடங்கியது.

இதனால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பொது தரிசன வரிசையில் சுமாா் 8 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 6 மணி நேரமும் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மேலும் கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பக்தர்கள் கூறுகையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் விஐபிகளை அழைத்துச் செல்வதற்கு தான் நேரம் அதிகமாக உள்ளது, சாதாரண பக்தர்களை வரிசையில் அனுப்ப எந்தவிதமான ஏற்பாடும் செய்வதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் நகரின் பல இடங்களிலும் மாட வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் வேதனை அடைந்தனர்.

ஆட்டோக்கள் வேகமாக வருவதும் பக்தர்களை வழியிலேயே இறக்கிவிட்டு அவர்களிடத்தில் தகராறு செய்வதும் கூடுதல் பணம் கேட்டு தகராறு செய்வதும் என ஆட்டோ டிரைவர்கள் ஈடுபடுகிறார்கள். இதனை காவல்துறையினர் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top