Close
ஜூன் 14, 2025 11:05 மணி

பௌர்ணமி கிரிவலம்: பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு- ரயிலில் இடம் பிடித்த பெண் மீது தாக்குதல்..!

ரயிலில் குவிந்த பக்தர் கூட்டம்

திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து, ரயில் வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், வைகாசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.27 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை பிற்பகல் 1.53 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 4.30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இரவு 8 மணிக்குப் பிறகு லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கியனா். தொடா்ந்து, புதன்கிழமை காலை வரை விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன், அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

கிரிவலத்தின்போது அவ்வப்போது மழை பெய்தது. மழையைப் பொருள்படுத்தாமல் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்  மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை 11 மணிக்கு மேல் கிரிவலம் முடித்த பக்தர்கள், சென்னை, கிளாம்பாக்கம், மாதவரம், பெங்களூரு, சேலம், திருப்பூர் கோவை போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால்  அவதி அடைந்தனர்.

தினமும் இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை, என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கிரிவலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பேருந்துக்கும் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . வயதானவர்கள் கைக்குழந்தையுடன் என்ற தாய்மார்கள் பேருந்துக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.

பௌர்ணமி முடிந்த பின்பும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு ரயில்கள் , பெண் மீது தாக்குதல்

இந்நிலையில், திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக செல்லும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது . ஆனாலும், அவை போதுமானதாக இல்லை. அதனால், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ரயில் நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒரே நேரத்தில் ரயிலில் ஏற முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் அனைத்தும் நிற்கவும் இடமின்றி கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ரயிலில் ஏற முடியாமல் திணறினர்.

இருக்கையை பிடிக்கும்போது ஒரு பெண்மணியை ரயிலில் பயணம் மேற்கொண்ட ஒருவர் தாக்கியதில் பெண்மணிக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் ரயிலில் இருந்து கீழே இறக்கி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பெரும்பாலானோர் ரயிலில் ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, இனிவரும் பௌர்ணமி நாட்களில், கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆட்டோ களால் பாதிப்பு

திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளில் பக்தர்களை தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக அண்ணா சிலை, பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு அதிக கட்டணம் கேட்டதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  மாவட்ட நிர்வாகம் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும். அதிகம் தொகை வாங்கும் ஆட்டோ டிரைவர்களின் பர்மீட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top