திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே ரூ 2.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சண்முகம், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், செயற்பொறியாளர் சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வாளர் சத்யா, அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசபாக்கம் எம்எல்ஏ, சரவணன் புதிய திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசியதாவது;
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவிலில் புதுப்பாளையம் மற்றும் செங்கம் சுற்று வட்டார பல்வேறு பகுதியில் இருந்து திருமணம் செய்ய புதூர் மாரியம்மன் கோவிலுக்கு அதிக அளவில் வருவதாலும் இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து வருவதாலும் இந்த கோவில் அருகாமையில் புதிய திருமண மண்டபம் வேண்டும் என்று இப்பகுதி மக்களும் கோவில் நிர்வாகத்தாரும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் அருகாமையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ 2.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்பட்டு அதனை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் இந்து சமய அறநிலைத்துறை மூலம் நமது கலசபாக்கம் தொகுதிக்கு ஏராளமான கோயில்களுக்கு புனரமைத்தல், கோவில் திருப்பணிகள் கோவில் குடமுழுக்கு போன்ற பல்வேறு கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது, இந்த கலசபாக்கம் தொகுதியில் 100க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளது. அத்தனை கோயில்களும் படிப்படியாக கோவில் திருப்பணிகள் கோயில் பாலாலையும் செய்யப்பட்டு வருகிறது. இத்தனை திட்டங்களும் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திருமண மண்டபம் இப்போது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் கோயில் அருகாமையில் உள்ள இந்த திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை தாசில்தார் திருநாவுக்கரசு, பரம்பரை அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




